Monday, 12 November 2012

கௌரி-21

கௌரி விரதத்திற்கான இறுதிக்கிறுக்கல் இது. ஆயிரம் பெயர் சொல்லி
அழைத்தாலும் அகிலவுலகின் அன்னை அவள் ஒன்று தானே. வற்றாத
 கருணை ஊற்றான அன்னைக்கு இந்த கிறுக்கல் சமர்ப்பணம்.
அவள் அருள் எல்லோருக்கும் கிட்டுவதாக :)


அன்பினுருவே அருள்ஞானவடிவே
அவனிதனுக்கோர் அகல்விளக்கும்நீயே
ஆர்க்கும் வினைகட்கெல்லாம் ஆகுதியான செல்வி
இன்னவரந்தருவாயே இப்பிறப்பின்கண்ணே
ஈவதெல்லாம் என்வரமே ஈர்த்தன்புசெய்தாய்நீயே
உவந்தேத்தி நின்றேன் உமையவள் நினையே
ஊரெங்கும் பலவாறு நூறங்கு திருநாமம்
எடுத்தோதியியம்பிடினும் என்தாய் நீயொன்றே
ஏற்றிடுவாய் அருள்விளக்கே ஏதமிலாத்தாய் நீயே
ஐம்புலன் கொண்டேற்றிடுவேன் ஐம்பூதநாயகியை
ஒருகாற்றவஞ்செய்தீசன் ஒருபாதி வென்றாய் நீயே
ஓய்தலின்றி உரைத்திடுவேன் ஓங்குபுகழ் திருநாமம்
ஔடதம் நீயன்றோ சௌபாக்கியதேவி
அடிசரண்புகுந்தேன் அருள்புரி அன்னை நீயே

No comments:

Post a Comment